July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு

நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படம் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஜெய்பீம் படத்திற்கு ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது வன்னியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் பாமகவினர் அளித்த புகார் மனுவில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தயாரித்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர்காடு சாலையில் அமைந்துள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரிப்பில் பாதுகாப்பு ஏதும் கோரப்படாத நிலையில் உளவுத்துறை அறிக்கையின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ஆயுதப் படையைச் சேர்ந்த 5 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.