May 24, 2025 20:08:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் வெள்ளம்: நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டுள்ளார்.

சென்னையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது, இந்த பகுதிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

தான் வழக்கமாக வரும் காரில் பயணிக்காமல், வேறுவாகனமொன்றில் வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் சென்று, நீருக்குள் இறங்கி மக்களுடன் கலந்துரையாடினார்.

அதேநேரம், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என முதல்வர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது.