July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை”; சோனியா காந்தி கவலை!

2022 இல் ,உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க, பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என சோனியா காந்தி கூறியுள்ளார்.

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சனைகள் குறித்து கட்சித் தலைமை நாள்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும், ஆனால் அந்த அறிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் கடைநிலை தொண்டர்களை சென்றடையவில்லை என சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லாதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார் ‌

நாட்டின் அரசமைப்பு சாசனங்களை மோடி அரசு படிப்படியாக அழித்து வருகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள சோனியா, ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளும் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள், நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார் .இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸார் போராட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர்களும் ,தொண்டர்களும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு ,கட்சியினர் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வரும் தேர்தல்களில் வெற்றி அடைய முடியும் எனவும் சோனியாகாந்தி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.