July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும்”: பழ.நெடுமாறன்

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா ,இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது போல கருதிக்கொண்டு இலங்கை அரசு ,தமிழக மீனவர்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது என அவர் கூறியுள்ளார்.

1980-களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்வதும், படுகாயம்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தை கண்டித்துக் குரல் எழுப்பியவுடன், அதை திசை திருப்பும் வகையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு நாடகத்தை ராஜபக்ஸ அரசு அரங்கேற்றியிருக்கிறது. இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு பதிலடி கொடுக்க இந்திய கடற்படை முன்வரவேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.