July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்”; பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை இலங்கை கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துள்ளது என தெரியவருகிறது.

அதில், மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டதாகவும், அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார்‌ எனவும் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை படையினரின் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரனை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும் சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இவ்வாறான அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.