July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’

சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென தமிழக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சதீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சதீவு கடற்பிராந்தியத்தில், மீன் பிடிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என கோரி ராமேஷ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ தெரிவித்துள்ளது.

இலங்கை வசமுள்ள கச்சதீவை இந்திய மீனவர்களின் நலன் கருதி மீளவும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடலில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்குமாறு கோரி ஞாயிற்றுக்கிழமை (17) கடல் வழி கண்டனப் போராட்ட​ம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.