May 23, 2025 13:33:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகளிரையும் மனித குலத்தையும் இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்யவேண்டும்: திருமாவளவன்

மகளிரையும் மனித குலத்தையும் இழிவுபடுத்தி பேசும் மனுதர்மத்தை தடைசெய்யவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனுஸ்மிருதி நூலை தடைசெய்யவேண்டும் என கோரி விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் இன்று சென்னையில் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மகளிரையும் மனிதகுலத்தையும் இழிவுபடுத்தி உரைக்கும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும்.மகளிரை இழிவுபடுத்திப் பேசியதாக அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறாக சித்தரிக்கின்றனர்.பெண்களை நான் இழிவுபடுத்திவிட்ட தாக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.

இணையவழி கருத்தரங்கில் 40 நிமிடம் ஆற்றிய என் உரையில் 40 நொடியை துண்டித்து எனக்கெதிராக சனாதள சக்திகள் திரித்து வெளியிட்டுள்ளன.நான் பேசிய முழுமையான பேச்சை பெண்கள் கேட்க வேண்டும். அவர்களின் நோக்கம் என்னை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல. திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே.

திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி சுமத்துகின்றனர். ஒரு அரசியல் சக்தியாக இதை பயன்படுத்தி திமுகவிற்கு நெருக்கடியை கொடுக்க முயல்கின்றனர் என்று திருமாவளவன் தெரிவித்தார்.