July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’: கே.எஸ். அழகிரி

‘நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது என கே. எஸ். அழகிரி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அழகிரி, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் சீமான் செயல்படுவதாக குற்றம்சட்டியுள்ளார்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையில் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், சற்குணனுக்கும், நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருவது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கே. எஸ். அழகிரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.