July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தர பிரதேச வன்முறை: அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, விவசாயிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம்  தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஞாயிற்றுக்கிழமை அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.

அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர்.

இதனையடுத்து லக்கிம்பூரில் வன்முறை வெடித்ததுடன் பொலிஸிஸார், கூட்டத்தை தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது, இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.