October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் அக்டோபர் 31 ஆம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம்

தமிழகத்தில் அக்டோபர் 31 ஆம் திகதிவரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் திகதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரது கருத்துகளைக் கேட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை முழுவதுமாக முடியாத நிலையில், பண்டிகை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளில் பணி புரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைகளின் நுழைவு வாயிலில் மக்கள் காத்திருக்கும்போது போதுமான இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள உரிய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே 3 ஆவது அலையை தவிர்க்க இயலும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.