July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய ‘பப்ளிசிட்டி திருடன்’

பிரபல காமெடி நடிகர் சூரி வீட்டின் திருமண விழாவில் நகை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரை பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் சில விசித்திரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சீமான் என்று பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,திருமணத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில் புகுந்து ஒன்பதரை பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரான விக்னேஷ் என்ற நபர் குறித்து விசாரணை நடத்தியதில் இவரது தந்தை பரமக்குடி பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருவதுடன்,விக்னேஷ் ஒரு விளம்பர பிரியராவார்.

சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களிடம் நெருங்கி பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதில் பெருமை கண்டு வந்திருக்கிறார்.

அதேபோல,முக்கிய பிரபலங்களின் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் அழைப்பில்லாமலே கலந்து கொள்வதுடன்,விழாக்களில் நகை, பணம் என எதாவது ஒன்றை திருடி தாமாகவே மாட்டி கொள்வார்.

சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விக்னேஷ்,அவரது மகள் கழுத்தில் இருந்த வைர நெக்லஸை திருடிச் சென்றுள்ளார்.

அதேபோல,மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழாவில் 10 சவரண் நகை திருட்டு போனதையடுத்து விசாரணை நடத்திய மதுரை பொலிஸார்,திருமண நிகழ்ச்சியை பதிவு செய்த ட்ரோன் கேமரா வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் விக்னேஷின் செயல்பாடுகள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன்,பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் நகையைத் திருடியதை விக்னேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து விக்னேஷை கைது செய்து மதுரை அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதன்போது, நன்கு வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுது போக்கிற்காகவும், தனது சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, ‘இவர் மீது ஏகப்பட்ட திருட்டு வழக்குகள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் ஒரு பிரபலம் என்பதைப் போல ஊருக்குள் பந்தாவாக சுற்றி வருவாராம்.

விக்னேஷ் அவ்வப்போது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கிக் கொண்டு ‘தன்னை காணவில்லை’ என புகைப்படத்துடன் விளம்பரம் கொடுக்க சொல்வாராம்’  என விக்னேஸின் தந்தை பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.