July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரை காற்சட்டையுடன் பரீட்சை நிலையம் வந்த மாணவிக்கு திரை சீலை அணிய வேண்டிய நிர்ப்பந்தம்!

இந்தியா அசாம் மாநிலத்தில் அரை காற்சட்டையுடன் பரீட்சை எழுத சென்ற 19 வயது மாணவி பரீட்சை மேற்பார்வையாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து அவர் திரை சீலை ஒன்றை கட்டிக் கொண்டு பரீட்சை எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த “ஜூப்லி தமுலி” என்ற 19 வயது மாணவி, வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் பரீட்சைக்காக 70 கிமீ பயணம் செய்து தேஸ்புர் பகுதியில் உள்ள பரீட்சை மையத்திற்கு சென்றுள்ளார்.

அவர் அரை காற்சட்டை அணிந்திருந்ததை கவனித்த பரீட்சை மையத்தின் அதிகாரி அவரை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்க மறுத்துள்ளார். எனினும் தன்னிடம் பரீட்சைக்கான அனைத்து ஆவணங்களும் உள்ள போதிலும் பரீட்சை எழுத அனுமதிக்காதது ஏன் என குறித்த மாணவி கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் முழு காற்சட்டையுடன் வந்தால் மட்டுமே பரீட்சை எழுத அனுமதிக்க முடியும் என பரீட்சை மையத்தின் அதிகாரி வலியுறுத்தியதையடுத்து குறித்த மாணவி திரை சீலை ஒன்றை கட்டிக்கொண்டு பரீட்சை எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

தமது தந்தை கால்சட்டை வாங்குவதற்கு கடைக்கு சென்ற போது தனது பரீட்சை நேரம் கடந்து செல்வதால் திரைச் சீலையை அணிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு “இது என் வாழ்க்கையில் மிகவும் அவமானமான அனுபவம்” என்று அவர் சம்பவத்தை விவரித்தார்.

சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேசிய ஜூப்லி தமுலி, “அரை காற்சட்டை அணிவது குற்றமா?” என கேள்வி எழுப்பியுள்ளதோடு, பரீட்சை விதிகளில் அரை காற்சட்டை அணிய கூடாது என தெரிவிக்கப்படவில்லை,

ஒரு ஆண் நபர் இது போன்று உடை அணிந்து வந்திருந்தால் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பார். ஆனால் ஒரு பெண் இது போன்று ஆடை அணிந்தால், மட்டும் விமர்சனம் வருகிறது என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.