July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விபரங்கள்: விரைவில் 3 ஆவது பட்டியல் வெளியீடு

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விபரங்கள் குறித்த மூன்றாவது பட்டியல் இம் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விபரங்கள் குறித்த பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் இம்மாதம் வழங்கவுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இடையில் ஒப்பந்தமொன்று போடப்பட்டுள்ளது.

அதில் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விபரங்களை பரிமாறிக் கொள்வது பற்றி தான் இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் வரி செலுத்தும் இந்தியர்கள் தங்கள் வருமான வரிக்கணக்கு தாக்கலில் சுவிஸ் வங்கிக் கணக்கு விபரங்களை சரியாக குறிப்பிட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் என இரண்டு முறை சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து கணக்கு வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில்,தற்போது மூன்றாவது முறையாக சுவிட்சர்லாந்து அரசு தம்மிடம் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் தரவுகளை வழங்க இருக்கிறது.

அதில் முக்கியமாக சுவிட்சர்லாந்தில் நிலம், கட்டடம் உள்ளிட்டவற்றில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.