July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்கள் விபரீத முடிவெடுக்க வேண்டாம்; நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது

நீட் தேர்வு தொடர்பில் மாணவர்கள் யாரும் விபரீத முடிவெடுக்க வேண்டாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெறாத காரணத்தினால் சேலத்தை சார்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்,மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள  ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான  சட்டப் போராட்டம் தற்போது தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்து கொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவ – மாணவிகள் தற்கொலைக்கு  காரணமாக தொடர்ந்து அமைந்து வருவதாக முதலமைச்சர் சாடியுள்ளார்.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற – நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தமிழக முதல்வர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் கசிவு ,ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ – மாணவிகள் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய வைக்கிறது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான தமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது.

நாளை (12) தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெறும் மசோதா நிறைவேற இருப்பதாக முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினையாக கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம், சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத் தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது என உறுதி அளித்திருக்கிறார் ஸ்டாலின்.

ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன் என தமிழக முதலமைச்சர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் முதலாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவியர் படித்து முடித்த பின் மருத்துவம் பயில வேண்டும் என்றால் இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை எழுத வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வு ஆனது சிபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் மட்டுமே நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.