July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடா செல்ல முயன்ற இலங்கையர்களுக்கு உதவியவர்கள் தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கடல் வழியாக கனடாவிற்கு செல்லும் நோக்கில் தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 27 பேர் படகு ஒன்றின் மூலம் கடல் வழியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடி சென்றுள்ளனர்.

இவர்கள் கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவ்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி மதுரையில் தங்கியிருந்த 27 பேரையும் ராமநாதபுரம், மதுரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து கனடா தப்பிச் செல்ல மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கை தமிழர் 32 பேரை மங்களூர் கியூ பிரிவு பொலிஸார் ஜூன் மாதம் 11ஆம் திகதி மாலை கைது செய்தனர்.

இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணத்தில் சிலர் அடைக்கலம் கொடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

அதன்படி இலங்கை தமிழர்கள் சிலரை மங்களுரூ தனிப்படையினர் ஜூன் மாதம் 20ஆம் திகதி அழைத்து வந்து வேதாளை கடல் பகுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிகாரி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சனிக்கிழமை ராமநாதபுரம் சென்றுள்ளனர்.

மண்டபம் அருகே வேதாளை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பார்வையிட்டனர். இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை பிடித்து ராமநாதபுரத்தில் வைத்து விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்து உதவியவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.