July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் லடாக்கில் உலகின் மிக உயரமான சாலை திறப்பு!

உலகின் மிக உயரமான, பொது வாகனப் போக்குவரத்துக்கான சாலை இந்தியாவின் லடாக்கில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை கடல் மட்டத்தில் இருந்து 18,600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

லடாக்கின் பாங்காங் ஏரியை, லே நகருடன் இணைக்கும் இந்த புதிய சாலை, இந்திய இராணுவத்தின் 58 ஆவது ரெஜிமென்ட் எஞ்சினியர் சார்பில் கட்டப்பட்டுள்ளது.

இது லே, பாங்காங் இடையிலான தூரத்தை 41 கி.மீ. குறைப்பதுடன் உலகின் மிக உயரமான சாலை மற்றும் அரிய மருத்துவத் தாவரங்களை சுற்றுலாப் பயணிகள் இங்கு காணலாம் என லடாக் எம்.பி. ஜம்யாங் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம் எனவும் நாடோடி கால்நடைகள், ஏரிகள் மற்றும் பிற அழகிய இடங்களை பார்வையிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை லே மாவட்டத்தில் 18,300 அடி உயரத்தில் அமைந்துள்ள கர்துங்லா கணவாய்தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக இருந்து வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அதைவிட அதிக உயரத்தில் செல்லும் புதிய சாலை கேலா கணவாய் வழியாக 18,600 உயரத்தில் திறக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இனி இந்த சாலையே பொது வாகனப் பயன்பாட்டுக்குரிய உலகின் மிக உயரமான சாலையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளதுடன், வருங்காலத்தில் உள்ளூர் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த சாலை முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக லடாக்கின் லலோக் பிராந்தியத்தில் சுற்றுலா மேம்படும் என்பதால் அப்பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு இந்த சாலை உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசின் மகத்துவத்தையும் ,சாலையை கட்டமைத்த இராணுவப் பொறியாளர் பிரிவையும் லடாக் எம்.பி பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.