July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாலிபான்களுடன் முதலாவது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது இந்தியா

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்களுடன் முதலாவது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையை இந்தியா ஆரம்பித்துள்ளது.

கட்டாருக்கான இந்திய தூதுவர் தீபக் மிட்டால், தாலிபான்களின் கட்டார் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் மொஹமட் அப்பாஸை சந்தித்துள்ளார்.

தாலிபான்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த சந்திப்பு கட்டாரில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் பொதுமக்கள் இந்தியாவுக்கு பயணிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகள் நடைபெறக் கூடாது என்று இந்திய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா வலியுறுத்திய விடயங்களை நேர்மறையாகக் கையாள்வதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.