June 1, 2025 15:39:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயலலிதா பல்கலை விவகாரம்; மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலைமறியல்

தமிழகத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் இன்று (31) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க கூடாது என்பதே அ.தி.மு.க.வினரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், இன்று சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத்திருந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், அதற்கு அ.தி.மு.க தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து சென்னை, கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.