July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

வேளாண் துறைக்கும் காகிதம் இல்லாத இ பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

உணவு தானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூர்யகாந்தி பயிர்களில் தேசிய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் இடம்பெற வழிவகை உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண் தொகுப்பு திட்டம், மானாவாரி நில மேம்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 16 திட்டங்கள் மூலம் இலக்கை அடைய வழிவகை செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பது 75 விழுக்காடாக உயர்த்தப்படும் என விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிறது.

தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும் என தமிழக விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை  தயாரித்து உள்ளதாக தமிழக விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது என விவசாய பட்ஜெட் அறிக்கையின் போது கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.

சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி உயர்த்தப்படும்.

உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ.10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என  வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக் கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்,பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்று அறிவிப்பு  வேளாண் பட்ஜெட்டில் தாக்கலாகி இருக்கிறது .

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்.

பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் ,இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் ஒன்றிய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் தமிழ் நாட்டில் மிக முக்கிய தொழில்களில் ஒன்றாக காணப்படுவது கரும்பு விவசாயம்.

இம்முறை வேளாண் பட்ஜெட்டில் கரும்புக்கான தனித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன .

கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத் தொகைக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு 40 2.50 ரூபாய் வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்  தொடங்கப்பட்டிருக்கிறது.

76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்  என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது.

குழந்தைகள் தாவரங்களை பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்  எனக் கூறப்படுகிறது.

இவ்வாறு தமிழகத்தில் வேளாண் துறையை ஊக்குவிக்கவும், அபிவிருத்தி செய்யவும் பல்வேறு புதிய திட்டங்களும் ,சலுகைகள், மானியங்கள் என பல்வேறு வகையிலான திட்டங்கள் இ பட்ஜெட் வாயிலாக தமிழக சட்டசபையில் தாக்கல் ஆகியிருக்கிறது.

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.