July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானார்.

மதுரை ஆதீனம் 292 வது குருமகாக சன்னிதானம் அருணகிரிநாதர்(77) உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஏறத்தாழ 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் தொன்மையான மதுரை சைவ மடத்தின் 292வது குருமகா சன்னிதானமாக அருணகிரிநாதர் 1975ல் பட்டம் பெற்று 1980 இலிருந்து பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார். தஞ்சை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த அருணகிரிநாதர் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தருமை ஆதீனத்தின் திருக்கூட்ட அடியவராக ஆதீன பயிற்சிபெற்றவர்.இந்நிலையில் அவருக்கு கடந்த 9 ம் திகதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த 2012 ம் ஆண்டு இம்மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை இவர் நியமித்தார்.இதனையடுத்து காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.அரசு மடத்தை ஏற்று நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானதையடுத்து நித்தியானந்தாவை வாரிசு பொறுப்பிலிருந்து நீக்கி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.