May 14, 2025 12:24:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உடல்நலக்குறைவால் பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

பேரறிவாளனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில்  உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக பரோல் விடுப்பில் தனது தாயுடன் தங்கியிருக்கும் பேரறிவாளன் தனது உடலில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன்.

பரோல் விடுப்பில் வந்த பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டில் அவர் தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு, அடுத்த மாதம் 28 ஆம் திகதி வரை பரோல் நீட்டிப்பு செய்திருக்கிறது தமிழக அரசு.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, மூட்டு வலி , கண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக அவருடைய தாயார் அற்புதம்மாள் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு நோய்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவரை உள் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என விழுப்புரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாயார் அற்புதம்மாளுடன் மருத்துவமனைக்கு வந்த பேரறிவாளன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.