![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/stalin-2.jpg?fit=950%2C588&ssl=1)
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, நமது நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமையையும் காக்க வேண்டியது நமது கடமை எனவும் பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அறிக்கையில் தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ‘குறித்த துப்பாக்கிச் சூட்டில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமேற்பட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்தோடு சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது எனவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை
நிறுத்த நடவடிக்கை கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்@DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.#CMMKSTALIN | #TNDIPR |@mp_saminathan pic.twitter.com/eB3Bxf35P9— TN DIPR (@TNDIPRNEWS) August 4, 2021