July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கர்நாடகா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு தன்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் அவசரமாக டெல்லி சென்ற எடியூரப்பா அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார்.இந் நிலையில் தனது ராஜினாமாவை அவர் அறிவித்திருக்கிறார் .

எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.இதனை அடுத்து எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதனால் கர்நாடகாவில் ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர்.அவர்களை சமாதானம் செய்த எடியூரப்பா, அமைதி காத்து வந்தார்.இந்நிலையில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது .

இதனையடுத்து திங்கட்கிழமை நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவை தொடரில் உரையாற்றுகையில் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார் .

மாலையில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த எடியூரப்பா,தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். எடியூரப்பாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட கர்நாடக முதலமைச்சர்,புதிய முதலமைச்சர் பதவி ஏற்கும் வரை இடைக்கால முதல்வராக தொடரும்படி கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா
தன்னை ராஜினாமா செய்யுமாறு யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என கூறியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பே பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக கூறியுள்ள எடியூரப்பா,அடுத்த தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்வதே தனது இலக்கு என தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ.க.வினரே,பகிரங்கமாக பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சன கருத்துகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு 78 வயதாகுவதால் முதல்வர் பதவியிலிருந்து அவரை மாற்ற வேண்டும் எனவும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெற்று தலைமைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.