July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை கடற்படையினர் எம்மை விரட்டியடித்தனர்”: தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக மோசமான காலநிலை காரணமாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

காற்றின் வேகம் குறைந்ததையடுத்து நேற்று மீன்வளத் துறையிடம் அனுமதி பெற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 700 ற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நாலாயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

கச்சதீவுக்கும் – தனுஷ் கோடிக்கும் இடையே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஐந்திற்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கைக் கடற்படையினர் தங்களை விரட்டியடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் 50 ற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி கரை திரும்பியதாக கூறுகின்றனர்.

இதன் காரணமாக படகு ஒன்றுக்கு நாற்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரை ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.