முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உடல்நல குறைவினால் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளன் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி புழல் சிறையிலிருந்து ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளனுக்கு, பரவும் கொரோனா பெருந் தொற்றின் காரணமாக நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் ஒரு மாத கால பரோல் முடிவுற்ற நிலையில், மீண்டும் அவரின் தாயாரின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்கியுள்ளது.
இரண்டு மாத பரோல் விடுப்பில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்த நிலையில், பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேரறிவாளனுக்கு சமீபத்தில் சிறுநீரக தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு சிகிச்சை பெறுவதற்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.