July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க என்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவரான டாக்டர் எல் முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.

அவருக்கு தகவல், ஒலிபரப்பு, பால்வளம், கால்நடை மற்றும் மீன் வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மீனவர் நலனைப் பாதுகாப்பேன் எனவும், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீன்வளத்தை பெருக்கவும், மீனவர் நலனைப் பாதுகாக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீனவர் நலன் அவர்களுக்கான மானியம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வழங்கி இருப்பதாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய துறையாக இருப்பது மீன்வளம்.அந்தப் பொறுப்பில் தான் மத்திய அமைச்சரவையில் அமர்ந்திருப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொறுப்பின் மூலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாகச் செயல்படுவேன்.மேலும், 2016ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட தற்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் இன்னும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருப்பது தான் கடலில் மீனவர்களுக்கும், இலங்கை கடற்படைக்கு இடையே அடிக்கடி நிகழும் மோதல்.

தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு மீன்பிடித்துறை இணை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் இதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.