July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்

(Photo:JK/ Twitter)

ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடத்த தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை, மத்திய உள்துறை அமைச்சக குழு தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தொகுதி மறுசீரமைப்பு செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையிலேயே, இந்திய உள்துறை அமைச்சகம் இன்று (06) ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள குழு இன்று தனது பணியை தொடங்கியதுடன் முதல்கட்டமாக அனைத்து கட்சி தலைவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குப்கர் கூட்டணி தலைவர்கள் ஸ்ரீநகரில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பின்னர் குப்கர் கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நம்பிக்கை தரும் எந்த அம்சமும் இடம்பெறவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் ‘ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காஷ்மீர் அரசியல் கட்சிகள், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.