July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும்’ : இந்திய தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

(FilePhoto)

வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள கடற்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிற்கும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து, மற்றும் கொரோனா முடக்கம் போன்றவற்றினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செயற்பாடுகளும் கடற்றொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரினால் இந்தியத் தூதுவருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், கடற்தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்கள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்திய  அமைச்சர், வாழ்வாதார சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பினை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தியா விரைந்து உதவுவதை நன்றியுடன் நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ், கடற் தொழிலாளர்களுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்தியத் தூதுவர், தமது வெளியுறவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளை தெரிவிப்பதாக கடற் தொழில் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.