![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/jammu-e1624778427220.jpg?fit=681%2C446&ssl=1)
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப பிரிவு வளாகத்தில் இன்று அதிகாலை இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சம்வத்தை தொடர்ந்து அந்த விமானப்படை தளம் முழுவதுமாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
‘ட்ரோன்’ மூலம் இங்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது ,
இரண்டு சிறிய வகை குண்டுகள் வெடித்ததால், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அங்கு தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களும் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஞாயிறு அதிகாலை இரண்டு சிறு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக விமானப் படைத் தரப்பில் டுவிட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு விமானப்படை தளத்தின் தொழில்நுட்பப் பிரிவு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும் அதில் ஒரு வெடிகுண்டு வெடித்ததில் கூரை சேதமடைந்து இருப்பதாகவும், இன்னொரு குண்டு திறந்தவெளியில் வெடித்து உள்ளதாகவும் டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த சிறிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் எந்தவித பொருள் சேதமும் ஏற்படவில்லை எனவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ,லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019 முதல் பிரிக்கப்பட்டது .
தற்போது அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தொகுதி வரையறை செய்யும் பணிகள் முன்னேற்பாடு நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திடீரென இரண்டு சிறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் அங்கு உள்ள விமானப்படை தளத்தில் பதிவாகியுள்ளமை அங்கு பதற்ற நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது.