July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் இலங்கை கடற்படையினரிடம் விசாரணை நடத்துவேன்’

ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்துவேன் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில்,

‘தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இலங்கை கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் யார் ஈடுபட்டாலும் தவறு தான் என குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ், பாம்பன் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மையெனில் அது குறித்து இலங்கை கடற்படையிடம் விசாரணை நடத்துவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ‘தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் இந்திகே டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் அதே நேரத்தில், இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி யார் நுழைந்தாலும் கைது செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (25) வங்கக்கடலில் கச்சதீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.