
வட்ஸ் அப் நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு ,டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் தமது புதிய கொள்கைகளை ஏற்கச் செய்ய தந்திரமான வேலைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் வட்ஸ் அப் நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய கொள்கைகள் தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்,வட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களுக்கு தமது நிறுவனத்தின் புதிய கொள்கைகளை ஏற்குமாறு நாள்தோறும் செயலியில் அறிவிப்பு வெளியிட்டு வருவதாகவும் இத்தகைய தந்திரங்கள் மூலமாக நமது கொள்கைகளை பயனாளர்கள் ஏற்கும்படி அந்நிறுவனம் கட்டாயப்படுத்துவதாகவும் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதற்கு முன்பாக வட்ஸ் அப் நிறுவனம் தமது புதிய கொள்கைகளை பயனாளர்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பதாக மத்திய அரசு சாடியுள்ளது.