July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பாந்தோட்டை துறைமுகம்; இந்தியாவுக்கு ஆபத்து என்கிறார் வைகோ

ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு துணை நின்ற சீனா, தமிழ்நாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியை  கைப்பற்றுவதென்பது தமிழ்நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு சீனாவின் பிடியில் இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்படுவது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ,

ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின் தென் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு வழங்கி உள்ளதாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்திய பெருங்கடல் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் அமெரிக்க டொலருக்கு சீனா இலங்கையிடம் இருந்து குத்தகைக்கு பெற்று, இந்த மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி,சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஹெக்டேர் நிலத்தையும் கையகப்படுத்தி சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வைகோ அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூயஸ் கால்வாய் அருகே மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களை கையாளும் வசதி கொண்டதாகும்.

இதில் 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். இந்தத் துறைமுகம் அந்த மார்க்கமாக செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைக்கக்கூடியது. இதனால் எரிபொருள் தேவையும் கணிசமாக குறையும்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ திட்டத்திற்கு முக்கிய துறைமுகமாக இருக்கும் என்பதால்,இதன் மூலம் சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் எழுந்துள்ளது என வைகோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராக போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

அங்கே இராணுவ துருப்புகளை நிறுத்த துணிந்தால் தமிழ்நாட்டிற்கும் கேடு விளையும்.எனவே ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.