
2021ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தகுதியான 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணை இன்று (31) உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாடு முழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் வெற்றிகண்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு குறையும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.