July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு;7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வரின் கடிதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை; கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிகள் யாரையும் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பாகுபாடு பார்க்காதீர்கள்.

ஒருவருக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றாலும் சரி, விடுதலை அளிக்க வேண்டுமென்றாலும் சரி அதனை நீதிமன்றங்கள்தான் செய்ய வேண்டுமே தவிர, அதில் அரசியல் அழுத்தங்கள் கூடாது என கே. எஸ் அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இந்த அழுத்தங்கள் சமூகத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை உருவாக்கும்,சட்ட ஒழுங்கு இல்லாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சி.பி.ஐ விசாரணைக்குழுவும் 7 பேர் விடுதலையில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.