
மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்த ராஜநாராயணன், கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார்.
புதுச்சேரி லாசுப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த, கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவர் கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். கடந்த 2009 செப்டம்பர் 25 அன்று இவரது மனைவி கணவதி அம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது படைப்புகளில் கோபல்லபுரம் கிராமம், கோபல்லபுரத்து கிராமத்து மக்கள் மற்றும் கதவு ஆகிய சிறுகதைகள் மிகவும் புகழ்பெற்றது. சமீபத்தில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் கி. ராஜநாராயணனுக்கு ஞானபீடம் விருதளிக்க வேண்டுமெனக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தன்னுடைய அனுபவங்களையும், தான் அறிந்த / கேட்ட கதைகளையும் நம்மிடம் கதையாக கூறும்போது, அவர் காலங்களை கையாண்ட விதம் புதுமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. தற்போதைய நூற்றாண்டில் இருந்து கதை சொல்லும் இவர், நினைவுகளின் வழியாக அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அந்த கதையின் உரையாடல் களுக்கும் அழைத்து சென்று விடுவார்.
அத்துடன் புராணங்களையும் இணைத்து தற்போது பேசிக்கொண்டிருப்பவற்றுடன் இணைத்து விடுவார். ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு காலங்களுடன் முன்னும், பின்னும் சென்று ஆராய்ந்து நடத்தும் ராஜநாராயணனின் நுட்பம் தான் இந்த அனுபவக் கதைகளை முக்கியமாக்குகிறது.
இத்தனை பெருமைபெற்ற ராஜநாரயணன், இன்று வயது மூப்பு காரணமாக தனது 98 ஆவது வயதில் காலமானார்.