July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய சின்னத்திரை படப்பிடிப்புகள் இடைநிறுத்தம்; திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை

நடிகர் அஜித்குமார் திரைப்பட கலைஞர்களுக்காக 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சினிமா படப்பிடிப்புகள் தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது, ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் 25 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கியிருந்தார்.

அதற்கமைய, கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி இருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ அஜித் 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியளித்துள்ளதாக செல்வமணி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எந்த நிகழ்விலும் திரைப்பட துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட போவதில்லை எனவும் அதன்பிறகு நிலைமையை கருதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நலிந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் எனவும் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.