July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்க’: ஸ்டாலினிடம் வைகோ வேண்டுகோள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில்  வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருவதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து பல கோடி தமிழர்களின் உள்ளத்தை மகிழ்விக்க வேண்டும்.

மேலும், தவறு செய்யாமல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்திரவதை அனுபவித்து வருவதாக அறிக்கையில் வைகோ குறிப்பிட்டிருக்கிறார்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் வாழ்க்கையும் இருண்டு பாழாய் போனது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு, ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டு விட்டதாகவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை நடத்தி வருவதாகவும் வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.