October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹைதராபாத்தில் உள்ள பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் உயிரியல் பூங்காக்களிலும் அச்ச நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

உயிரியல் பூங்காவில் பணிபுரியும் வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களிடையே பசியின்மை, நாசி வெளியேற்றம் மற்றும் இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளைக் கவனித்தனர்.

சுமார் 10 வயதுடைய 12 சிங்கங்கள் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன. அதில் நான்கு ஆண் சிங்கங்களுக்கும் நான்கு பெண் சிங்கங்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

சிங்கங்களுக்கு தொற்று உறுதியானதையடுத்து நேரு உயிரியல் பூங்கா மறு அறிவிப்பு வரை மூடப்பட்டது.

சமீபத்தில் 25 க்கும் மேற்பட்ட பூங்கா ஊழியர்கள் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பராமரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது பணியாளர்களிடமிருந்தோ கொரோனா வைரஸ் சிங்கங்களுக்கு பரவியிருக்கலாம் என்று பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

அத்தோடு, குறித்த பூங்கா மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருப்பதால், பூங்காவிற்கு அருகே வசிக்கும் மக்களிடமிருந்து காற்றின் மூலம் வைரஸ் சிங்கங்களுக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எட்டு புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.