October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்; பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

மக்களின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது என ராமதாஸ் அறிக்கை வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களை போன்று ஆக்கபூர்வமான கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி மக்களுக்கான பணியை தொடரும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ம.க.வுக்கும், அக்கட்சி இடம் பெற்றிருந்த அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனவும்
தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தோல்வியடைந்ததற்கான காரணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றைச் சரி செய்யவும், அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

கடந்த காலங்களைப் போன்று ஆக்கபூர்வமான கட்சியாக பா.ம.க மக்கள் பணியைத் தொடரும்.

பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் பா.ம.க மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அளித்த உழைப்பும், ஒத்துழைப்பும் இணையற்றவை.
இத்தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணியாற்றிய அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.