June 1, 2025 18:39:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் ஒக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவால் 22 நோயாளர்கள் உயிரிழப்பு

இந்தியாவின், மராட்டிய மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஒக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 22  கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் ஒக்சிஜன் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஒக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றபோது வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கசிவு காரணமாக நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கல் 30 நிமிடம் நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக வென்டிலேட்டரில் இருந்தவர்கள் உயிர் இழந்தனர்” என்று நாசிக் மாநகராட்சி ஆணையாளர் கைலாஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மருத்துவமனையில் 171 நோயாளிகள் ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இவர்களில் சம்பவம் நடைபெற்ற போது 11 பேர் உயிரிழந்த அதேவேளை, மேலும் 11 பேர் சற்று நேரம் கழித்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையைக் கோரியுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது வருத்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் பல அரசியல் தலைவர்களும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.