
(Photo:DcpNorthDelhi/Twitter)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதேநேரம் வணிக வளாகம், அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் திரையரங்குகளில் 30 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு இலட்ச கணக்கில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மே 15 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 20 வரை ஒத்திவைக்கப்படுவதாக உத்தர பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதனிடையே முழு நேர ஊரடங்கை அமுல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தடுப்பூசியை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஏழு மணி நேர இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.