July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோவிஷீல்ட் ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா

உள்நாட்டுக்கான தேவை உயர்வடைந்துள்ளதால் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்டின் ஏற்றுமதியை இந்திய மத்திய அரசாங்கம்  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதால் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்தியாவில் சுமார் ஐந்தரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கான உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்பதால் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

தடுப்பூசிகளுக்கான தேவை அதிகம் என்பதால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.