July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் அறிவிக்கும் மாபெரும் பொதுக் கூட்டம்; மு.க.ஸ்டாலின் அழைப்பு

திருச்சியில் மார்ச் 7 ஆம் திகதி நடைபெறும் “விடியலுக்கான முழக்கம்” எனும் தி.மு.க.வின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார் .

களம்தயார்,கணைகளும்தயார்.அவற்றை தேர்தல் களத்தில் எவ்வாறு ஏவ வேண்டும் என்பதற்கான பயிற்சி பாசறை தான் திருச்சி பொதுக்கூட்டம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஆட்சி மாற்றம் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பிற்கு செயல் வடிவமும்,வண்ணமும் தரும் லட்சிய பிரகடனத்தை அக்கூட்டத்தில் வெளியிட இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அது தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டமாக இருக்கும்.இந்த சிறப்பு பொதுக்கூட்டமானது தேர்தல் வெற்றி மாநாட்டிற்கான முன்னோட்ட பொதுக் கூட்டமாக இருக்கும் எனவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தபால் வாக்குகள் மீது அவ நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ள ஸ்டாலின் ,ஆனால் ஆளும் தரப்பினர் செய்யக்கூடிய தில்லு முல்லுகளிலும், தேர்தல் ஆணையத்தின் அவசர நடவடிக்கைகளிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலின்போது தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் மிகுந்த கவனத்துடன், தபால் வாக்குகளை கண்காணிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.