July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும்’

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மூன்றாம் திகதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ள நிலையில்,
இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் சரத்குமாரும் ,மகளிர் அணித் தலைவி ராதிகாவும் தூத்துக்குடி சென்றுள்ளனர்.

அங்கு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்,அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியினர் தற்போது இந்திய ஜனநாயக கட்சியோடு சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க.வோடு 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்ததால் எந்த தேர்தலையும் முழுமையாக சந்திக்க முடியாமல் போய்விட்டது. இதனால் எங்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது.ஆகவே இம்முறை சீட்டுக்காக யாரிடமும் நிற்க வேண்டாம் என்ற முடிவில் தனி சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தாங்கள் உருவாக்கும் பிரதான அணி வெற்றி பெறலாம் எனவும் சரத்குமார் கூறியிருக்கிறார்.

தாங்கள் அமைப்பது மூன்றாவது அணி அல்ல எனவும் பிரதான கூட்டணி என தெரிவித்துள்ள சரத்குமார், இந்த பிரதான கூட்டணியை அமைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் விஜயகாந்த் தங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.