July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சோனியா காந்திக்கு ராகுல்காந்தி மீது கவலை, ஸ்டாலினுக்கு உதயநிதி மீது கவலை’ :அமித்ஷா சாடல்

சோனியா காந்திக்கு ராகுல்காந்தி மீது கவலை, ஸ்டாலினுக்கு உதயநிதி மீது கவலை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்திற்காகவும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காகவும் தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ் நாட்டு மக்களோடு தமிழில் பேச முடியாததையிட்டு தான் வருத்தம் அடைவதாக தனது கவலையை தெரிவித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ஆகியோர் வளர்த்தெடுத்த அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து இருக்கிறது.

அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி என்பது மக்களுக்கான நலத் திட்டங்களை முன்னெடுக்கும் ஒரு கூட்டணியாகும்.

2ஜி, 3,ஜி , 4 ஜி எல்லாம் தமிழகத்தில் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமித்ஷா அவற்றை பட்டியலிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்த போதுதான் 12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது.

2ஜி என்றால் மாறன் ,3 ஜி என்றால் கருணாநிதி, 4 ஜி என்றால் நேரு குடும்பத்தினர்.தி.மு.க.வின் ஊழலைப்பற்றி பேசும் போது சிரிப்பு வருவதாக குறிப்பிட்டுள்ள அமித்ஷா 2 ஜி ஊழல் செய்தது யார் என திரும்பி பார்க்க வேண்டிய நேரம் இதுவென குறிப்பிட்டிருக்கிறார்.

தி.மு.க, காங்கிரஸ் கட்சி எல்லாம் குடும்ப அரசியல் என விமர்சித்த அமித்ஷா, தி.மு.க.வில் 3, காங்கிரஸில் 4 குடும்பத்தினர் ஆட்சியில் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்

தி.மு.க.வும் காங்கிரஸூம் தங்கள் குடும்பத்தினர் ஆட்சிக்கு வர வேண்டுமென முயற்சிக்கிறது.

சோனியா காந்திக்கு ராகுல்காந்தி மீது கவலை, ஸ்டாலினுக்கு உதயநிதி மீது கவலை.

ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு ராகுல்காந்தி தமிழகம் வந்ததை விமர்சித்துள்ள அமித் ஷா, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே காங்கிரஸ் அரசு தான் எனவும் தெரிவித்துள்ளார் .

ஆனால் தற்போது தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை பா.ஜ.க அரசு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது எனவும் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

தமிழக மக்கள் விரைவில் நல்ல முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர். உங்களுக்கு குடும்ப ஆட்சி தேவையா ? அல்லது மக்களுக்கான ஆட்சி தேவையா? என்பதை நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும்,நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனும்,தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறிய அமித்ஷா, பா.ஜ.க கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடையே கேட்டுக்கொண்டுள்ளார்.