இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டர் பதிவொன்றை பகிர்ந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் தடுப்புக்காவல் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆதாரங்கள் சிதைக்கப்படலாம் என்பதைக் காரணம் காட்டி திஷா ரவியை மேலும் மூன்று நாட்கள் சிறையில் வைத்திருப்பதற்கு பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்த ஏதுவாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், ‘டூல்கிட்’ ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருந்தார்.
போராட்டங்கள் நடத்தும்போதும் அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து விவரிக்கும் ஆவணம் தான் ‘டூல்கிட்’ என்பதாகும். இதுவே இந்தியாவின் சுதந்திர தினத்தின் போது டெல்லியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த ‘டூல்கிட்’ ஐ திஷா ரவி தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து தேசத்துரோக மற்றும் சதி முயற்சி குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து 5 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
5 நாட்களின் பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேலும் மூன்று தினங்கள் திஷா ரவியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதியைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.
அத்தோடு குறித்த ‘டூல்கிட்’ ஐ திசா திஷா ரவி மேலும் சிலருடன் பகிர்ந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார் அவர்களையும் விசாரணை செய்ய அனுமதிக்கும்படி நீதிமன்றில் அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த “டூல்கிட்” மூலம் கிரெட்டா தன்பர்க் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என டெல்லி பொலிஸார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததுள்ளனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திசா திஷாரவி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் பல பொது அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.