July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா அமைதிப்படைக்கு 2 லட்சம் கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்கின்றது இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 லட்சம் தடுப்பூசி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைய இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

“வக்சின் மைத்திரி”  திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் 25க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே நேரம் இவற்றில் பெருமளவானவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இலங்கைக்கு 26 தொன்கள் நிறையுடைய மருத்துவ பொருட்கள் மற்றும் 500000 கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட கொவிட்19 சார்க் நிதியத்தின் ஊடாக பாரியளவில் உதவிகளை பெற்றுக்கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், பசுபிக் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த 49 நாடுகள் வெகுவிரைவில் இந்தியாவிலிருந்து தடுப்பூசியினை பெறவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.