July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“உலக நாடுகளில் இந்தியா நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது”: பிரதமர் மோடி பெருமிதம்

(File Photo)

உலக நாடுகளில், நம்பிக்கை நட்சத்திரமாக, சுடரொளியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொரோனா காலத்தில் நம்மைக் காத்துக் கொண்டதோடு, பிற நாடுகளுக்கும் இந்தியா மருத்துவ உதவிகளை அளித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்களவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பெண் எம்.பி.க்களின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக உள்ளதாகவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு சுயசார்பு நிலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொருளாதாரம் உள்ளிட்டவற்றில், தமது தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில், 2 இலட்சம் கோடி அளவிற்கான திட்டங்கள் ஏழை-எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொரோனாவை எதிர்த்துப் போராடிய முன்களப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.