![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/26FEBTH-EDAPPADI.jpg?fit=1024%2C639&ssl=1)
தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசாரம் கூட்டத்தில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் நின்றதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வெற்றி நடைபோடுகிறது தமிழகம்’ என்ற தொனிப்பொருளில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று 5ஆம் கட்டமாக ராணிப்பேட்டை , வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதன்போது, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதலமைச்சரை வரவேற்கக் காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த நபரிடம் பேரணாம்பட்டு போலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.