இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கு போலியோ மருந்துகளுக்கு பதில் தொற்று நீக்கியை (சானிடைசர்) வழங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்துவயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட்ட வேளை தவறுதலாகக் கிருமி நீக்கிகள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 குழந்தைகளுக்கு இவ்வாறு தவறுதலாக கிருமிநீக்கிகளை வழங்கியுள்ள நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து போலியோ மருந்து வழங்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது பணியிலிருந்த வைத்தியர் ஒருவர் உட்பட மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்திய பிரதமர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.